மழைப்பாடல் - 23

பகுதி ஐந்து : முதல்மழை

[ 2 ]

இளஞ்சிவப்புத்திரைகள் போடப்பட்ட பன்னிரண்டு சாளரங்களைக் கொண்டதும் மெல்லிய மரப்பட்டைகளாலும் கழுதைத்தோலாலும் கூரையிடப்பட்டதும் பன்னிரு சக்கரங்கள் கொண்டதும் நான்கு குதிரைகளால் இழுக்கப்பட்டதுமான கூண்டுவண்டியில் பத்து இளவரசிகளுடன் காந்தாரி அஸ்தினபுரிக்குப் பயணமானாள். இளமையிலேயே வளைத்துக் கட்டப்பட்டு அவ்வண்ணமே வளர்ந்து முழுமைபெற்ற எட்டு மூங்கில்விற்களின் மேல் அந்த வண்டியின் உடல் அமைக்கப்பட்டிருந்தமையால் சாலையில் சக்கரங்கள் அறிந்த அதிர்வுகள் வண்டியை அடையவில்லை. வண்டியின் மேல் அஸ்தினபுரியின் கொடி பறந்துகொண்டிருந்தது.

வண்டியைச்சுற்றி காவல்வீரர்கள் விற்களுடனும் வேல்களுடனும் சென்றனர். முன்பக்கம் பீஷ்மரின் ரதமும் திருதராஷ்டிரனின் ரதமும் செல்ல பின்னால் விதுரனின் ரதமும் அமைச்சர்களின் ரதங்களும் சென்றன. கடைசியாக பிறவண்டிகளும் காவலர் அணிகளும் வந்தன. காந்தாரநகரியில் இருந்து தந்தையிடமும் அன்னையரிடமும் உடன்பிறந்தவர்களிடமும் வாழ்த்து கொண்டு விடைபெற்றுக் கிளம்பும்போது சத்யவிரதையும் சத்யசேனையும் தலைகுனிந்து குளிர்ந்தவர்களாக இருந்தனர். சுதேஷ்ணை, சம்ஹிதை, தேஸ்ரவை, சுஸ்ரவை, நிகுதி ஆகியோர் அழுதுகொண்டிருக்க விளையாடிக்கொண்டிருந்த சுபையும் சம்படையும் அதைக்கண்டு தாங்களும் அழத்தொடங்கினர். தசார்ணை அவளுடைய பொற்பூவாடையைப் பற்றி சுற்றிச் சுற்றி அப்படியே அமர்ந்து அது குடையாக அமைவதை ரசித்துக்கொண்டிருந்தாள். காந்தாரி மட்டும் புன்னகையுடன் அமைதியாக விடைபெற்றாள்.

அவள் தன் கண்களைக் கட்டிக்கொண்ட செய்தியை அதற்குள் காந்தாரபுரியே அறிந்திருந்தது. மங்கல இரவுக்குப்பின் காலையில் அவள் கண்களில் துணிக்கட்டுடன் வெளியே சென்றபோது அவளைக்கண்ட முதியசேடி திகைத்து “அரசி” என்றாள். “என்னை வழிநடத்து… நான் சற்று கால்பழகும்வரை” என்றாள் காந்தாரி. அந்தப்புரத்தில் சத்யசேனை அவளை அணுகி அவள் கண்களில் கட்டைப் பார்த்து நெஞ்சில் கைவைத்து நின்று “அக்கா” என்றாள். “நான் இனி இந்த விழிக்கட்டை அவிழ்க்கவே போவதில்லை” என்று காந்தாரி சொன்னாள். “அக்கா” என்றபடி அவள் ஓடிவந்து கைகளைப் பற்றிக்கொண்டாள்.

முதலில் அவள் அன்னை சுகர்ணை அதை அவளுடைய மனக்கசப்பின் விளைவென்றே புரிந்துகொண்டாள். ஆனால் அவள் புன்னகையுடன் “நான் அவருடன் அவர் வாழும் உலகில் வாழ விரும்புகிறேன். பிறர் உலகில் எனக்கு ஏதும் தேவையில்லை” என்று சொன்னபோது அந்த உணர்ச்சிகளை அங்கிருந்த ஒவ்வொரு பெண்ணும் உடனே புரிந்துகொண்டனர். அச்செய்தி மதியத்துக்குள் நகரம் முழுக்க பரவியபோது அனைத்து நகர்ப்பெண்களும் அதை உணர்ந்துகொண்டனர்.

அஸ்தினபுரிக்குக் கிளம்பும் நாளில் அரண்மனை முகப்பில் காந்தாரி வணங்கி வண்டியில் ஏறும்போது சுபலர் கண்ணீருடன் “வசுமதி” என்றார். அவரால் ஏதும் பேசமுடியவில்லை. அசலனும் விருஷகனும்கூட கலங்கிய முகங்களுடன் நின்றனர். சுகர்ணை “நான் சொல்வதற்கொன்றும் இல்லை மகளே. நீ அனைத்தும் அறிந்தவள்” என்று சொன்னாள். காந்தாரி கடைசியாக சகுனியிடம் “தம்பி” என்றபின் வண்டிக்குள் ஏறிக்கொண்டாள். அதன் சகடங்கள் ஒருமுறை சுழன்றதும் அரண்மனைச்சேவகரும் சேடியரும் அறியாமல் ஓரடி முன்னாலெடுத்து வைத்து மனம் விம்ம நின்றனர்.

வண்டி கோட்டைவாயிலை நெருங்கியபோது குதிரையில் சகுனி பின்னால் வந்தான். வண்டியுடன் இணையாக வந்தபடி “அக்கா, சிலநாட்களில் நானும் அஸ்தினபுரிக்கு வருவேன்” என்றான். காந்தாரி புன்னகை செய்தாள். “இனிமேல்தான் என் கடமைகள் தொடங்குகின்றன அக்கா. நான் சொன்ன சொற்கள் வெறும் மனஎழுச்சியின் விளைவல்ல. பாரதவர்ஷமே உன் பாதங்களில் விழவேண்டும்” என்றான். அவள் மீண்டும் புன்னகைசெய்தாள். நான் வெல்லவேண்டிய அனைத்தையும் வென்றுவிட்டேன் என நினைத்துக்கொண்டாள். அதை எந்த ஆணிடமும் சொல்லிப்புரியவைக்கவும் இயலாதென்று தோன்றியது.

நகரை விட்டு நீங்கும்போது இளவரசிகள் சாளரங்கள் வழியாக விலகிச்சென்றுகொண்டிருந்த அரண்மனையையும் அரசவீதியையும் கோட்டைமுகப்பையும் எட்டிப்பார்த்து கண்ணீர்விட்டு விசும்பினர். தாரநாகத்தின் மணலில் வண்டி இறங்கியபோது தசார்ணை “அக்கா, இதுவா தாரநாகம்? இதுவா அக்கா?” என்றாள். சத்யசேனை அவள் கையை அடித்து “பேசாமலிருடீ” என்றாள். தசார்ணை மிகமெல்ல சம்படையிடம் “இதுதான் தெரியுமா?” என்றாள். சம்படையின் கண்களில் இருந்து கண்மை வழிந்து கன்னங்களில் பரவியிருந்தது. “அக்கா உன் கன்னங்களில் மை” என்றாள் தசார்ணை. சம்படை தன் மேலாடையால் கன்னங்களைத் துடைத்துக்கொண்டாள்.

தாரநாகத்தின் மறுகரையை அடைந்ததும் பாலைநிலம் முழுமையாகவே அவர்களை சூழ்ந்துகொண்டது. தசார்ணை சாளரம் வழியாகப் பார்த்து “ஒரே மணல்… சிவப்பாக இருக்கிறது…” என்றாள். “ஆனால் தொலைவில் நீர் இருக்கிறது” என்றாள் தசார்ணை. அழுகையை மறந்து சம்படை எட்டிப்பார்த்து “அதெல்லாம் கானல்… என் குருபத்னி சொன்னார்” என்றாள். “கானல் என்றால்? அதைக்குடிக்கமுடியாதா?” என்றாள் தசார்ணை. சம்படை “அது வெறும் தோற்றம்…” என்றாள். “ஏன் குடிக்கமுடியாது?” என்று தசார்ணை மீண்டும் கேட்டாள். “குடிக்கமுடியாது அவ்வளவுதான்” என்றாள் சம்படை. “விலங்குகள் குடிக்குமா?” என்றாள் தசார்ணை. “யாருமே குடிக்கமுடியாது” என்றாள் சம்படை. தசார்ணை ஐயத்துடன் சுதேஷ்ணையிடம் “அக்கா, குடிக்கமுடியாதா?” என்றாள். சுதேஷ்ணை “சும்மா இருக்கப்போகிறாயா அடிவேண்டுமா?” என்றாள்.

தசார்ணை மெல்ல “குடிக்கமுடியாத தண்ணீரை எதற்காக பிரம்மா படைத்தார்?” என்றாள். காந்தாரி அதைக்கேட்டு புன்னகை புரிந்து கையை நீட்டினாள். சத்யவிரதை தசார்ணையை அவளை நோக்கி உந்த அருகே வந்த சிறுமியின் தலையைத் தொட்டு “வறண்டநிலத்தில் திருஷை என்று ஒரு தெய்வம் வாழ்கிறது குழந்தை. அவள்தான் தாகத்தின் இறைவி. அவளுடைய வாகனம்தான் மரீசி. நீலமயிலின் வடிவில் இருக்கும் மரீசியின் மீது ஏறித்தான் திருஷை பாலைவனத்தில் உலவுவாள். மரீசியைத்தான் நாம் கானல்நீராகப் பார்க்கிறோம்.” தசார்ணை விரிந்த விழிகளுடன் தலையை ஆட்டினாள்.

“உடலற்றவளின் விடாயை நீரின்மைதானே தீர்க்கமுடியும்? என்னடி?” என்றாள் காந்தாரி. சத்யவிரதை “ஆம் அக்கா” என்றாள். “ஆனால் நான் கானலைத்தான் விரும்புவேன். நீரழகு விடாய் முடிவதுவரைதான். கானலோ இறப்புக்கணம் வரை கொண்டு செல்லும் பேரழகு கொண்டது” காந்தாரி சொல்லி மீண்டும் புன்னகைசெய்தாள். கண்களைக் கட்டிக்கொண்டதுமே அவள் புன்னகையில் தெய்வங்களின் சாயல் வந்துவிட்டதென சத்யசேனை எண்ணினாள்.

மான்தோலின் ரோம வாசனையும் வெயிலில் வெம்மைகொண்ட பதப்படுத்திய கூரைத்தோலின் வாசனையும் கொண்ட அந்த வண்டி அவளிடம் மெதுவாகப் பேசத்தொட்ங்கியது. கூண்டுக்கு அப்பால் அமரத்தில் அமர்ந்திருந்த வண்டியோட்டிகளின் மெல்லிய உரையாடலை அவள் கேட்டாள். சக்கரங்களில் ஒன்று மேலும் எளிதாகச் சுழல்வதை அறிந்தாள். வலப்பக்கச் சக்கரத்தின் குடத்தில் அடித்துக்கொள்ளும் அச்சின் உரசலை, கீழே அழுந்தி அழுந்தி மீளும் விற்களின் விம்மல் ஒலியை, நான்குபுரவிகளின் குளம்படிகளை, மூச்சொலிகளை, வால்சுழலும் ஒலியை அறிந்தாள். சிறிதுநேரத்தில் அந்த வண்டியை தன் உடலைப்போல உணர்ந்தாள். அவ்வுடலால் பாலையை அறிந்தாள். அங்கிருந்தவர்களில் அவள் மட்டுமே பாலையில் சென்றுகொண்டிருந்தாள்.

வெயில் ஏறியதும் அவர்கள் ஒரு சோலையில் ஓய்வெடுத்தனர். பாலையூருணியில் இருந்து நீர்கொண்டுவந்து மரவுரியை நனைத்து முகத்தையும் உடலையும் துடைத்தபின் குளிர் நீரருந்தி பாலைமரங்களுக்குக் கீழே விரிக்கப்பட்ட ஈச்சம்பாயில் படுத்துக்கொண்டனர். நெடுமூச்சுடன் புரண்டு படுத்துக்கொண்டிருந்த இளவரசிகள் விரைவிலேயே இயல்பாகவே துயில்கொண்ட மெல்லிய ஒலிகளை காந்தாரி புன்னகையுடன் கவனித்துக்கொண்டிருந்தாள். காலாட்டியபடி மரத்தின்மேலிருந்த கிளைகளை விரல்விட்டு எண்ணிக்கொண்டிருந்த தசார்ணை அவ்விரலை அப்படியே வைத்தபடி துயின்றிருந்தாள். அவள் மனம் துயிலை நாடவில்லை. அதில் பரபரப்பும் இல்லை. இறுக நீர் நிறைத்து மூடப்பட்ட தோல்பை போல அவள் அகத்தை உணர்ந்தாள். தளும்பாமல் சிந்தாமல் ஏங்காமல் தன் இருப்பை மட்டுமே உணர்ந்தவாறு அவளுடன் அது இருந்தது.

வெயிலில் வெந்த மணலின் மணம் ஏறி ஏறி வந்தது. அதுவரை காதுகளிலும் கன்னங்களிலும் பட்ட வெக்கையை அப்போது மூக்குக்குள் உணரமுடிந்தது. மாலை வெயில் முறுகியபின் அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். தூங்கி எழுந்த இளவரசியர் ஊர்நீங்கும் ஏக்கத்தை இழந்து புதுநிலம் காணும் ஆர்வம் கொண்டிருப்பதை காந்தாரி கவனித்தாள். அவர்கள் கிளர்ச்சியுடன் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு ஆடைகளை திருத்திக்கொண்டனர். முகத்தைக் கழுவி திலகமும் கண்மையும் அணிந்தபடி ஒருவருக்கொருவர் முகத்தைக் காட்டி நன்றாக உள்ளதா என்று வினவிக்கொண்டனர். சிறிய சிரிப்பொலிகளும் ஒருவரை ஒருவர் கடிந்துகொள்ளும் மென்குரல்களும் கேட்டுக்கொண்டிருந்தன. தசார்ணை உரக்க “அவள் மட்டும் ஏன் சிவப்பு வளையல்கள் அணிகிறாள்?” என்று கேட்க சத்யவிரதை ரகசியமாக அவளை அதட்டி அடக்கும் ஒலி கேட்டது. “அப்படியானால் எனக்கு?” என தசார்ணை மெல்லக்கேட்டாள்.

மீண்டும் வண்டியில் ஏறிக்கொண்டபோது இளவரசிகள் உவகைத்ததும்பலுடன் இருந்தனர். சாளரங்களின் அருகே அமர்ந்துகொள்வதற்காக முண்டியடித்தனர். சாளரத் திரைச்சீலைகளை நன்றாக விலக்கி வெளியே பார்த்தனர். தசார்ணை முழந்தாளிட்டு அமர்ந்து வெளியே பார்த்து “மரங்களே இல்லை” என்றாள். “பாலையில் எப்படியடி மரம் இருக்கும்?” என்றாள் சம்படை. “சத்தம்போடாமல் வாருங்கள்” என்று சத்யசேனை அவர்களை நோக்கி முகம் சுளித்தாள்.

“இந்த வண்டி படகுபோலச் செல்கிறதே” என்று சம்படை குரலைத்தாழ்த்திச் சொல்ல சுதேஷ்ணை “இதற்கு அடியில் வில் இருக்கிறதல்லவா? அதுதான் எல்லா அசைவுகளையும் வாங்கிக்கொள்கிறது” என்றாள். தசார்ணை உற்சாகமாக “அந்த வில்லிலே நாணே இல்லை” என்றாள். “நான் பார்த்தேன்…அந்த விற்களை போர் வந்தால் எடுத்து நாணேற்றுவார்கள்” என்று சம்படையின் கையைப்பிடித்து உலுக்கினாள் சத்யசேனை. “அவை மூங்கில்கள்…கங்கைக்கரையில் அவை ஏராளமாக மண்டிக்கிடக்கின்றன என்கிறார்கள்.” சுதேஷ்ணை “அவற்றை வெட்டித்தான் குழல் செய்கிறார்கள்…இனிய இசையை வாசிக்கிறார்கள்” என்றாள்.

பாலைவனத்தைச் சூழ்ந்து மேகமற்ற வானம் செந்நிறமாக கவிந்தது. பின்பு இருண்டு கருந்திரைக்கு அப்பாலிருந்து விண்மீன்களை ஒவ்வொன்றாக வெளியே கொண்டுவந்து பரப்பியது. வெம்மைநிறைந்த காற்று மெல்லமெல்லக் குளிர்ந்து உடலை நடுக்குறச்செய்யும்படி வீசியது. இளவரசியர் மரவுரிப்போர்வைகளை போர்த்திக்கொண்டனர். விண்மீன்கள் பெருகியபடியே வந்த வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்த சத்யசேனை “எவ்வளவு விண்மீன்கள்” என்றாள். நன்றாக நிலம் இருண்டபோது மிக அருகே விண்மீன்களாலான பந்தலாக வானம் தெரிய அனைவரும் விண்மீன்களை நோக்கினர். “பொன்னாலான நகைக்குண்டு போலத் தெரிகிறது ஒவ்வொன்றும்” என்றாள் சத்யவிரதை. சுதேஷ்ணை “கையெட்டினால் பறித்து விடும் கனிகள்” என்றாள்.

VENMURASU_EPI_73

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

சூதப்பெண்கள் மூவர் வண்டிக்குள் ஏறினர். மூத்தவள் வணங்கி “அரசியரை பணிகிறேன். இரவுநேரக் கதைப்பாடலுக்காக வந்திருக்கிறோம்” என்றாள். காந்தாரி புன்னகையுடன் “அமர்க!” என்றாள். அவள் தன் கையில் இருந்த சுவடிகளை ஏழாகப் பகுத்து கலைத்து மீண்டும் ஏழாகப் பகுத்தாள். அதில் ஏழாவது சுவடியை எடுத்தாள். புன்னகையுடன் “சதி அனசூயையின் கதை வந்துள்ளது அரசி” என்றாள். “சொல்க!” என்று காந்தாரி ஆணையிட்டாள். சூதப்பெண்கள் தங்கள் கையில் இருந்த உலோகத்தாலான தாளக்கருவியை சிறிய ஆணியால் மெல்ல மீட்டியபடி பாடத்தொடங்கினர்.

அத்ரி, பிருகு, குப்தர், வசிஷ்டர், கௌதமர், காஸ்யபர், அங்கீரஸர் என்னும் ஏழு வான்முனிவர்களையும் வாழ்த்துவோம். அவர்களில் முதன்மையானவரான அத்ரி மாமுனிவரின் புகழைப் பாடுவோம். அவரது அறத்துணைவி அனசூயையின் மங்கா பெரும் கற்பைப் போற்றுவோம். அரசியரே, அனசூயை என்றால் பொறாமையே அற்றவள் என்று பொருள். பெண் தன்னை நினைக்கும் காலம் வரை பொறாமையை வெல்லமுடிவதில்லை. தன்னைக் கடந்து தாயாக ஆகும்போது மட்டுமே அவள் பொறாமையைக் கடந்துசெல்கிறாள். அவளையே கற்பரசி என்கின்றன நூல்கள்.

விஷ்ணுவில் இருந்து பிரம்மன். பிரம்மனில் இருந்து சுயம்புமனு பிறந்தார். சுயம்புமனுவுக்கு அவரது துணைவியான சரரூபையில் உத்தானபாதன், பிரியவிரதன், ஆஹுதி, தேவாஹுதி, பிரசூதி என்னும் ஐந்து குழந்தைகள் பிறந்தன. அவர்களில் அழகுமிக்கவளான தேவாஹுதியை கர்த்தம பிரஜாபதி மணம் புரிந்தார். தேவாஹுதிக்கு கர்த்தம பிரஜாபதியில் கலை, அனசூயை என்னும் இரண்டு பெண்கள் பிறந்தனர். கலையை மரீசியும், அனசூயையை அத்ரியும் மணந்துகொண்டனர்.

அரசியரே, கலையுடன் இணைந்தது பொறாமை என்றறிக. பொறாமையை வெல்லும் பொறைநிலையோ கலையின் முதிர்நிலையே ஆகும். அனசூயை வாழும் பிரஜாபதியின் துணைவியாக பல்லாயிரம் மண்ணகங்களை தன் மடியில் தவழும் குழந்தைகளைப்போல காத்துவந்தாள். அன்றொருநாள் பூமி மீது இந்திரன் சினம் கொண்டான். வானில் அவன் வில் தோன்றாமலாயிற்று. தன் வஜ்ராயுதத்தை வளைதடியாக்கி மேகக்கூட்டங்களை வெள்ளாடுகளைப்போல அவன் ஓட்டிச்சென்று மேற்குத்திசையின் இருண்ட மடிப்பு ஒன்றுக்குள் ஒளித்துவைத்தான். மழையின்மையால் பூமி வெந்து வறண்டது. தாவரங்கள் பட்டு கருகின. கங்கை மணல்வரியாக மாறியது.

வைதிகர் தேவர்களுக்கு அவியிட்டு மும்மூர்த்திகளையும் வணங்கி காக்கும்படி மன்றாடினர். நாகர்கள் தங்கள் முதுநாகத்தெய்வங்களுக்கு பலிகொடுத்து வெறியாட்டாடி வணங்கினர். மானுடர் தங்கள் தேவர்களை வணங்க ஊர்வனவும் பறப்பனவும் நடப்பனவும் நீந்துவனவும் தங்கள் தெய்வங்களை வணங்கி மன்றாடின. மும்மூர்த்தியரும் தேவர்களும் இந்திரனைத் தேடி அலைந்தனர். அவனோ விண்ணக இருளுக்குள் ஒளிந்திருந்தான்.

நெய்யகன்ற அகலென பூமி தன் ஒளியவிந்து அணையும் நாளில் மண்ணில் வாழ்ந்த எளிய புழு ஒன்று தான் புழுவென்றறிந்தமையால் பொறாமையை வென்றது. அது தாகத்தால் வாடி இறக்கும் கணத்தில் அனசூயையை வேண்டியது. அன்னையே நான் இறப்பினும் என்குலம் அழியாது காத்தருள்க என்றது.

அதன் கோரிக்கையை அன்னை ஏற்றாள். அவள் கருணை மண்மீது மழையாகப் பொழிந்தது. மண்ணில் அனைத்துத் தாவரங்களும் எழுந்து விரிந்து தழைத்து மலர்ந்து கனிந்து பொலிந்தன. தேவர்கள் கோர அன்னை கருணைகொண்டாள். அவள் தவத்தாணையால் விண்ணிலும் மண்ணிலும் பத்து வெளியக நாட்கள் இருள் நிறைந்தது. விண்ணகம் இருளானபோது ஒளிந்திருந்த இந்திரன் தன் வஜ்ராயுதத்துடன் வெளியே வந்தான். அவனை தேவர்கள் கண்டடைந்தனர். தேவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப இந்திரன் கனிந்து மழைமுகில்களை விடுவித்தான்.

அந்நாளில் கைலாயத்துக்குச் சென்ற நாரதர் முக்கண்முதல்வனை வணங்குவதற்கு முன்பு அனசூயையை எண்ணி வணங்கினார். அதற்குக் காரணம் என்ன என்று சிவன் கேட்டபோது மும்மூர்த்திகளும் தோற்ற இடத்தில் வென்றவள் அனசூயை அல்லவா, அவள் வல்லமையே முதன்மையானது என்றார் நாரதர். அவ்வண்ணமே சொல்லி மும்மூர்த்திகளையும் யோகத்திலிருந்தும் துயிலிலில் இருந்தும் மோனத்திலிருந்தும் எழச்செய்தார். அனசூயையின் வல்லமையை அறிவதற்காக மும்மூர்த்திகளும் அத்ரி முனிவரின் தவச்சாலைக்கு மூன்று வைதிகர்களாக வந்தனர். தங்களுக்கு தாங்கள் விரும்பியவண்ணமே உணவளிக்கவேண்டுமென்று கோரினர். அவ்வண்ணமே ஆகுக என்று சொன்ன அத்ரி பிரஜாபதி தன் துணைவியிடம் அவர்கள் கோரும்படி உணவளிக்க ஆணையிட்டார்.

வான்கங்கையாடி உணவுண்ண வந்தமர்ந்த மூன்றுவைதிகர்களும் அனசூயையிடம் தங்களுக்கு குலப்பெண் ஆடையின்றி வந்து அன்னமிடுவதே நெறி என்றனர். கணவனின் ஆணையையும் கற்பின் நெறியையும் ஒரேசமயம் அவள் எப்படி காத்துக்கொள்கிறாளென்று அறிய அவர்கள் விழைந்தனர். அனசூயை அவர்கள் மூவரையும் தன் புல்லை அமுதாக்கும் காமதேனுவின் கைநீட்டி நெஞ்சுடன் அணைத்துக்கொண்டாள். அவர்கள் கண்களில் பால்படலம் மறையாத கைக்குழந்தைகளாக மாறி அவள் மடியில் தவழ்ந்தனர். அவள் ஆடையின்றி வந்து மூவருக்கும் முலையமுதூட்டினாள்.

அவர்கள் அவள் மடியில் மதலைகளாக வாழ்ந்தனர். முதல்பொருளின்றிப் பிறந்த மூலவர்கள் அவள் வழியாகவே அன்னையின் பேரன்பை அறிந்து களித்தனர். முத்தொழிலை ஆற்றும்பொருட்டு அவர்கள் மீண்டும் தங்களுருக்கொண்டபோதிலும் அன்னையின் அன்பை முழுதறியும் பொருட்டு அவள் உதரத்திலேயே ஒரேகுழந்தையாகப் பிறந்தனர். அந்த மகவு தத்தாத்ரேயன் என்றழைக்கப்பட்டது.

மும்மூர்த்திகளையும் மூன்று முகங்களாகக்கொண்டு ஆறுகரங்களுடன் பிறந்த தத்தாத்ரேயர் இளமையிலேயே நான்கு அறங்களையும் துறந்தார். ஐம்புலன்களையும் வென்றார். களைவதொன்றுமில்லாத நெஞ்சுகொண்டிருந்தமையால் அவர் அறியவேண்டியதென்று ஏதுமிருக்கவில்லை. ஞானங்களின் கொடுமுடியான வேதங்களைக் கற்கும்பொருட்டு தன் தந்தையான பிரம்மதேவனைத் தேடிச்சென்றார் தத்தாத்ரேயர். அவரைக்கண்டதும் பிரம்மனின் கையில் வாடாததாமரைகளாக மலர்ந்திருந்த நான்கு வேதங்களும் தத்தாத்ரேயரின் உடலில் வீசிய அன்னையின் முலைப்பால் வாசனையை உணர்ந்து நான்கு நாய்களாக மாறி அவரைத் தொடர்ந்தன.

“மும்மூர்த்திகளையும் முலையூட்டி வளர்த்தவளை வாழ்த்துவோம். பிரம்மத்தை ஞானமாக பெற்றெடுத்தவளை வாழ்த்துவோம். பிறிதொன்றிலாத பார்வை கொண்ட அனசூயை அன்னையை வாழ்த்துவோம். ஆம், அவ்வாறே ஆகுக!” என்று சூதப்பெண் பாடிமுடித்தாள். காந்தாரி அவளுக்கு பரிசில் அளித்து அனுப்பி வைத்தாள். அரசிகள் கதையால் அமைதிகொண்டுவிட்டதை அவள் கவனித்தாள். கதை என எது சொல்லப்பட்டாலும் உடனே தூங்கத் தொடங்கிவிடும் தசார்ணையும் சம்படையும் சத்யசேனையின் மடியிலும் சத்யவிரதையின் மடியிலும் கிடந்து மெல்லிய குறட்டை விட்டனர்.

சற்று நேரம் ஓய்வெடுத்தபின் மீண்டும் கிளம்புவதாகவும் இரவெல்லாம் பயணம் செய்யவிருப்பதாகவும் படைத்தலைவன் வந்து காந்தாரியிடம் சொன்னான். “நாளையும் மறுநாளும் வெப்பம் உச்சத்தில் இருக்கும் என்று கணிகர் சொல்கிறார்கள் அரசி. பகலில் பயணம்செய்யமுடியாது. நாம் நாளைக்காலைக்குள் ஸ்ரீகுண்டம் என்னும் சோலைக்குச் சென்று சேர்ந்தாகவேண்டும்.”

அவர்கள் வண்டிக்குள்ளேயே படுத்துக்கொண்டனர். வண்டியின் ஆட்டம் தொட்டில் போலத் தோன்றியது. காந்தாரி தூங்காமல் செவ்விதழ் இமை மூடிய கண்களுக்குள் நெளிந்து நெளிந்து சென்றுகொண்டிருந்த ஒரு செந்நிற நூலையே பார்த்துக்கொண்டிருந்தாள். வண்டிக்குள் இருந்த சிறிய நெய்விளக்கை சத்யசேனை ஊதி அணைத்ததை மூடிய கண்களுக்குள் ஒளி அவிவதாக உணர்ந்தாள். காற்று மணலை அள்ளி கூரைமேல் கொட்டும் மெல்லிய ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. வண்டி மெல்லிய மணலில் சகடங்கள் ஒலிக்க சென்றுகொண்டிருந்தது.

“அக்கா” என்று சத்யவிரதை அழைத்தாள். “என்ன?” என்றாள் காந்தாரி. “நீங்கள் முற்றிலும் மாறிவிட்டிருக்கிறீர்கள்… உங்கள் பேச்சும் சிரிப்பும் எல்லாம் வேறுயாரோ போலிருக்கின்றன” என்றாள். காந்தாரி புன்னகை புரிந்தாள். “நீங்கள் ஏன் கண்களைக் கட்டிக்கொள்ளவேண்டும்?” என்றாள் சத்யவிரதை. “எனக்கு இருபது விழிகள் இருக்கின்றன…” என்று காந்தாரி சொன்னாள். “ஒவ்வொரு விழியும் ஒவ்வொரு பருவத்தைச் சேர்ந்தவை… உலகையே அறியாத பேதையின் விழிகள்கூட நான்கு உள்ளன.”

“ஒரு கணவனுக்காக நாம் ஏன் வாழவேண்டும் அக்கா?” என்றாள் சத்யவிரதை. “நிஷாதர்களின் பெண்கள் அப்படியல்ல என்றார்கள் சூதர்கள். அவர்கள் அனைத்தையும் தங்களுக்காகவே செய்கிறார்கள். அவர்கள் வாழும் வாழ்க்கைதான் பொருள் உடையது” என்றாள். காந்தாரி புன்னகைத்தபடி “தெரியவில்லையடி…நான் எனக்கு எது மகிழ்வளிக்கிறதோ அதைச் செய்தேன். என்னிடமிருந்த அனைத்தையும் உதறாமல் நான் அவருடைய உலகுக்குள் நுழையமுடியாதென்று தோன்றியது. அதற்குமேல் ஒன்றுமே நான் சிந்திக்கவில்லை” என்றாள்.

“நீங்கள் என்னை என்ன சொன்னாலும் சரி, இதை பேதைத்தனம் என்றுமட்டும்தான் என்னால் சொல்லமுடியும்” என்றாள் சத்யவிரதை. “இருக்கலாம். ஆனால் பித்தியாகவும் பேதையாகவும் இருப்பதில் பேரின்பம் ஒன்று இருக்கிறது” என்றாள் காந்தாரி. இன்சிரிப்புடன் “நான் அதைப்பற்றித்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். இன்று அந்த சூதப்பெண் பாடியபோது எனக்கு விடை கிடைத்தது. தாய்மை என்பதும் பேதைத்தனம்தானே? அந்தப்பேதைத்தனத்தை அடையும்போதுதானே பெண்ணுக்கு இன்பமும் ஆற்றலும் முழுமையும் எல்லாமே கிடைக்கின்றன?”

“அதுவும் இதுவும் ஒன்றா?” என்றாள் சத்யவிரதை சலிப்புடன். “ஒன்றுதானடி. நான் மனைவியானேனா அன்னையானேனா என்று என்னாலேயே அறியமுடியவில்லை” என்றாள் காந்தாரி. சத்யவிரதை இறங்கியகுரலில் “வேண்டாம் அக்கா” என்றாள். “தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள்….வேண்டாம். நீங்கள் இந்தக் கண்கட்டுடன் அஸ்தினபுரிக்குச் சென்றால் இதையே ஒரு பெரிய புராணமாக சூதர்கள் ஆக்கிவிடுவார்கள். விரும்பினாலும்கூட உங்களால் கண்களை திறக்கமுடியாது…”

காந்தாரி “நான் இப்போதிருக்கும் இந்த நிலையில் இருந்து ஒருபோதும் விழித்தெழவில்லை என்றால் அதைவிட ஏதும் எனக்குத் தேவையில்லையடி” என்றாள். சத்யவிரதை அதன்பின் ஒன்றும் சொல்லவில்லை. பெருமூச்சுடன் திரும்பப்படுத்துக்கொண்டாள்.

அந்த உரையாடலை மற்ற தங்கையரும் கேட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் விட்ட பெருமூச்சுகள் இருளில் ஒலிப்பதை காந்தாரி கேட்டாள். அதன்பின் அஸ்தினபுரியை அடையும் வரை அவர்கள் அதைப்பற்றி ஏதும் பேசவில்லை.

சிறிதுநேரத்தில் காந்தாரி தூங்கிவிட்டாள். ஆனால் வண்டியின் அசைவும் ஓசையும் நீடித்தன. அவள் வண்டியில் இருந்தபடியே தொலைவில் தெரிந்த ஒரு மரத்தைப்பார்த்தாள். வண்டியில் அவளைத்தவிர எவருமில்லை. அவள் இறங்கி அந்த மரத்தை நோக்கி ஓடினாள்.

செல்லச்செல்ல அந்த மரம் தொலைவிலிருப்பதாகத் தோன்றியது. நெடுநேரம் கழித்து அதை நெருங்கினாள். அது தாலிப்பனை. அதன் பூ செம்மஞ்சளாக விரிந்து காற்றில் உலைந்தாடியது. அவளருகே அந்த சூதப்பெண் நின்றிருந்தாள். “இவ்வளவு பெரிய பூவா?” என்று காந்தாரி கேட்டாள். சூதப்பெண் சிரித்துக்கொண்டு “இந்த மலர் ஒரு நுண்வடிவக் காடு” என்றாள். காந்தாரி “ஏன் அது தனித்தே நிற்கிறது?” என்றாள். “காட்டை கருவிலேந்திய மரம் தனித்துத்தானே நிற்கமுடியும்?” என்றாள் சூதப்பெண்.