முதற்கனல் - 35

பகுதி ஏழு : தழல்நீலம்

[ 1 ]

கங்காத்வாரத்தின் காட்டில் வந்து தங்கும் பயணிகளின் மிச்சிலை உண்டுவாழும் தெருப்பன்றி ஒன்று புதர்க்காட்டுக்குள் நான்கு குட்டிகளைப்போட்டது. அவற்றில் மூன்றுகுட்டிகளை ஓநாய்கள் கவ்விக்கொண்டு சென்றன. எஞ்சிய குட்டியை அது புதரிடுக்கில் குழிதோண்டி புதைத்துவைத்தது. அக்குழிக்கு சற்று அப்பால் புதர்மூடிக்கிடந்த கல்மண்டபத்தில் கைவிடப்பட்டு மனம்கலங்கிய பெண் ஒருத்தி தன் குழந்தையுடன் தங்கியிருந்தாள். இடையில் ஒரு குழந்தை இருப்பதை அவள் ஆன்மா அறியவில்லை. அவள் உடலே அக்குழந்தையை தூக்கிக்கொண்டது, முலையூட்டியது. எந்நேரமும் கலங்கிவழிந்த கண்களுடன் வாயிலிருந்து ஓயாமல் உதிரும் சொற்களுடன் அவள் கங்காத்வாரத்தில் அலைந்தாள். கையில் கிடைப்பவற்றை எல்லாம் அள்ளித்தின்றாள். இரவில் அந்த மண்டபத்தின் வெம்மையான புழுதியில் வந்து சுருண்டுகொண்டாள். அவள் உடலின் ஓர் உறுப்புபோல பெரிய கண்கள் கொண்ட பெண்குழந்தை அவளை தன் உயிர்ச்சக்தியால் கவ்விக்கொண்டு அமர்ந்திருந்தது.

ஒருநாள் காலையில் அவள் எழவில்லை. முந்தையநாள் அவள் கால்வழியாகச் சென்ற நாகம் அவள் கட்டைவிரலின் ஆட்டத்தை பிழையாகப்புரிந்துகொண்டு கவ்விச்சென்றிருந்தது. நீலம் பாரித்துக் குளிர்ந்து கிடந்த சடலத்தில் இருந்து முலைப்பால் வரவில்லை என்பதை மதியம் வரை அழுதபின் கண்டுகொண்ட குழந்தை அவளுடலில் இருந்து பேன்கள் இறங்கிச்சென்றதைப்போல தானும் சென்றது. பேன்கள் குருதி வாசனைதேடியதுபோல தானும் தன் முதல்விசையால் பாலுக்காகத்தேடியது. புதருக்குள் கிடந்து தன் ஒற்றைக்குட்டிக்கு பாலூட்டிக்கொண்டிருந்த தாய்ப்பன்றியை கண்டுகொண்டது. தவழ்ந்து சென்று அந்தமுலையை தானும் கவ்வி உண்ணத் தொடங்கியது. முலைகளையே மனமாகக் கொண்டிருந்த அந்தப் பெண்பன்றி தன் காலைச் சற்று விரித்து குழந்தைக்கு இடம் கொடுத்தது.

கண் திறக்காத அக்குட்டியுடன் சேர்ந்து சுருண்டுகொண்டு குழந்தை தூங்கியதும் பன்றி தன் உணவுக்காகக் கிளம்பியது. பசித்து குரலெழுப்பிய பன்றிக்குட்டியுடன் சேர்ந்து அதேபோல குரல் எழுப்பியபடி குழந்தை காத்திருந்தது. பன்றி திரும்பிவந்ததும் அக்குட்டியுடன் சேர்ந்து முட்டிமோதி முலையுண்டபின் அன்னையின் அடிவயிற்று வெம்மையில் ஒண்டிக்கொண்டு தூங்கியது.

மூன்றுமாதம் பன்றி குழந்தைக்கு உணவூட்டியது. பெற்றகுழவியை அது துரத்திவிட்டபின்னரும் கூட மனிதக்குழந்தைக்குக் கனிந்தபடியே இருந்தது. பின்பு அதன் ஊற்று வற்றியது. பசித்த குழந்தை எழுந்தும் விழுந்தும் தன் சகோதரன் சென்ற பாதையில் சென்றது. திசையறியாமல் திகைத்து அழுதபடி சென்றபோது தன் அன்னை கிடந்ததுபோன்று படுத்திருந்த ஒரு பித்தியை கண்டுகொண்டது. அவள் தன் நெஞ்சில் எரிந்த சிதையுடன் துயிலற்று அலைந்து ஒரு கட்டத்தில் உடல் களைத்து அமர்ந்து சரிந்து அவ்வண்ணமே தூங்கிக்கொண்டிருந்தாள். அவளருகே சென்றகுழந்தை தானறிந்தவிதத்தில் அவளருகே படுத்து இடக்காலை அவள்மேல் போட்டு அணைத்துக்கொண்டு அவள் முலைக்கண்ணை தேடிக்கவ்வி சுவைக்கத் தொடங்கியது.

பித்தி நீலநீர் விரிந்த நீர்வெளியைநோக்கி எழுந்த அரண்மனையின் செம்பட்டுத்திரை நெளியும் உப்பரிகையில் நின்றிருந்தாள். மணிமுடிசூடி, பட்டும் நவமணிகளும் அணிந்து, ஒளிமின்னும் விழிகளுடன் நதியைப்பார்த்தாள். நீரலைகளைக் கொஞ்சிக்கொண்டிருந்த பறவைகளைக் கலைத்தபடி நூறு அணிநாவாய்கள் கரைநோக்கி வந்தன. இளஞ்செந்நிறப் பாய்கள் விரித்த நாவாய்வரிசை நீரில் மிதந்துவரும் செந்தாமரைக்கூட்டம் எனத் தோன்றியது. முன்னால் வந்த படகில் சூதர்கள் இசைத்த மங்கல இசையும் பின்னால் வந்த படகில் ஒலித்த பெருமுழவொலியும் இணைந்து அரண்மனை சுவர்களை விம்மச்செய்தன.

படகுவரிசையை எதிர்நோக்கிச் சென்ற அவள் அரண்மனைக்குழுவினர் நதிக்காற்றில் உப்பி எழுந்த செம்பட்டுப் பாவட்டங்களும் சிறகடித்த செம்பதாகைகளும் ஏந்தியிருந்தனர். வாழ்த்தொலிகள் முழங்க, மங்கலத்தானியங்களும் மலர்களும் பொழிய, இசையால் அள்ளி இறக்கப்படுபவனைப்போல நெடிய நிமிர்வுடனும் கலைந்து பெருந்தோளில் விழுந்த குழல்களுடனும் தாடியுடனும் அவள் தேவன் வந்திறங்கினான். படிகளில் ஏறி அவள் அரண்மனைக்குள் புகுந்தான்.

வெண்பட்டுவிதானம் விரிந்த பந்தலில் அவள் அவனுக்கு மாலையிட்டாள். நிலா எழுந்த சாளரம் கொண்ட அறையில் அவனுடன் இருந்தாள். யானையை அள்ளிஓடும் வல்லமை கொண்ட உள்ளோட்டங்களுடன் அசையாது நிற்கும் பாவனை காட்டும் பெருநதியில் நீந்தித்திளைப்பவளாக அவனை அறிந்தாள். அவன் பிம்பத்தை தன்னுள் வாங்கிச்சுருட்டிக்கொண்ட கிண்ணக்குமிழ் போல அவள் அவனை தன்னுள் அள்ளிக்கொண்டாள். மடியில் அதைப்பெற்று அள்ளி மார்போடணைத்து முலையூட்டினாள். முலைசுரந்து வழிகையில் மீண்டும் சாளரவிளிம்பில் நின்று அவன் வந்திறங்குவதைக் கண்டாள். மீண்டும் மீண்டும் அவனை அடைந்தாள்.

கண்விழித்துக்கொண்டு பெருங்கூச்சலுடன் குழந்தையைத் தூக்கி எறிந்தாள் பித்தி. அது மல்லாந்து மண்ணில் விழுந்து கரிய இதழ்கள விரித்துக்கொண்டு கைகால்களை அசைத்து வீரிட்டழுதது. உடல்நடுங்க அதையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் முலைகள் ஒடிக்கப்பட்ட கள்ளிச்செடியின் தண்டுகள் போல பால் சுரந்து சொட்டிக்கொண்டிருந்தன. முகத்தை மறைத்த சடைமுடிக்கற்றைகளை விலக்கி சற்றே குனிந்து புழுதியில் நெளியும் புழுவெனக்கிடந்த குழந்தையைப் பார்த்தபின் மெல்ல அமர்ந்து அதைத் தொட்டுப்பார்த்தாள். பின்பு அதை எடுத்து தன் மார்புடன் அணைத்துக்கொண்டு இன்னொரு முலைக்காம்பை அதன் வாய்க்குள் வைத்தாள்.

அவளுடனேயே அக்குழந்தை வளர்ந்தது. பாம்பைப் பற்றியபின் விடுவதறியாத வானரம் போல அவள் கங்கைக்கரை ஊர்களெங்கும் பதறியலைந்தாள். எரிந்த வீட்டில் எஞ்சிய மரச்சிற்பம் போன்றிருந்தாள். வணிகரும் ஆயரும் வேடரும் வேளிரும் கூடிய அங்காடிகளின் நடுவே சென்று வெற்றுடலுடன் நின்று இருகைகளையும் தூக்கி மொழியற்ற மூர்க்கத்துடன் கூச்சலிட்டாள். வீரர் கூடிய சதுக்கங்களில் சென்று நின்று அவள் ஆர்ப்பரித்தபோது அந்த வேகத்தைக்கண்டே காவலர் வேல்தாழ்த்தி விலகி நின்றனர்.

அவள் இடையில் அமர்ந்து சென்றுகொண்டிருந்தது குழந்தை. பின்னர் அது நடக்கத்தொடங்கியது. பிறமனிதரைப்பார்த்து தானும் ஒரு மனிதப்பிறவி என உணரத்தொடங்கியது. குப்பைகளில் இருந்து ஆடைகளை எடுத்து அணிந்தது. கண்ணில் படும் ஒவ்வொருவரிடமும் கையேந்தியது. உலகமென்பதே வந்துவிழும் பொருட்களுக்கு அப்பால் தெரிந்த கண்களும் கால்களும் கைகளும் முகச்சுளிப்புகளுமாக இருந்தது அதற்கு. வணிகர்கள் அதற்கு கைக்குச்சிக்கிய எதையாவது விட்டெறிந்தனர். உலர்ந்த அப்பத்துண்டுகள், வற்றலாக்கிய இறைச்சித்துண்டுகள், மீன்கள். எது கையில் வந்தாலும் அக்கணமே ஓடி தன் அன்னையை அடைந்து அவள் முன் நீட்டி நின்றாள். அவள் வாங்கி உண்டு எஞ்சியதையே அவள் உண்டாள்.

அவள் தலையின் சடைமுடி நீண்டு கனத்து வேர்க்கொத்து போல தொங்கியது. அவளிடம் பேசிய வணிகர்கள் ’உன் பெயரென்ன?’ என்று கேட்டபோது அவள் பிரமித்த கண்களால் பார்த்தாள். அவர்களில் ஒருவர் எப்போதோ அவளிடம் “உன்னைவிட நீளமாக இருக்கிறது உன் சடை. சடைச்சி என உன்னை அழைக்கிறேன்” என்றார். அவ்வாறு சிகண்டினி என்ற பெயர் அவளிடம் ஒட்டிக்கொண்டது. எவர் கேட்டாலும் அவள் தன் பெயரை சிகண்டினி என்று சொன்னாள். அவள் சொல்லிய ஒரே சொல்லும் அதுவாகவே இருந்தது.

அவளிடம் மொழி இருக்கவில்லை. அவளறிந்த மொழி அவள் உதட்டுக்கு வரவேயில்லை. தன்னுள் தொலைந்துவிட்டிருந்த அவள் அன்னை சிகண்டினியிடம் ஒரு சொல்கூடப் பேசியதில்லை. பகலும் இரவும் கால் மடித்து அமர்ந்து தோளிலும் முதுகிலும் முலைகள் மேலும் கருஞ்சடைகள் தொங்க, சிவந்த கண்கள் கனன்று எரிய, கரிய பற்களைக் கடித்தபடி, நரம்புகள் தெறிக்கும்படி கைகளை இறுக முறுக்கிக்கொண்டு முன்னும் பின்னும் ஆடியவளாக அவள் உறுமிக்கொண்டிருந்தாள். அவளுக்குள் ஏற்றம் ஒன்று ஊறிநிறையாத கிணறொன்றை அடியற்ற அகழிக்கு இறைத்துக்கொண்டிருப்பதுபோல. உடலால் துடுப்பிட்டு நிலத்தில் படகொன்றைச் செலுத்துபவள் போல.

ஏதோ ஒரு தருணத்தில் அவள் எழுந்து எவரையோ கொல்லப்போகிறவள் என, எங்கோ ஆழ்குழியில் விழப்போகிறவள் என, ஓலமிட்டபடி ஓடுவாள். அன்னை ஆடிக்கொண்டிருக்கையில் சிகண்டினி அருகே இயல்பாக அமர்ந்திருப்பாள். அவள் ஓடுகையில் சிகண்டினியும் பின்னால் ஓடுவாள். ஏதேனும் ஒரிடத்தில் திகைத்து பதைத்து நின்று பின் இரு கைகளையும் தூக்கி அன்னை ஓலமிடுவாள். கண்கள் கலங்கி வழிய மார்பில் ஓங்கி ஓங்கி அறைந்தபடி அலறுவாள். சிகண்டினி அன்னையைக் காண ஆரம்பித்தநாள் முதல் அவள் அந்த மார்பை அறைந்துகொண்டிருந்தாள். அவ்வளவு அறைந்தும் உடையாததாக எது உள்ளே இருக்கிறது என்று சிகண்டினி வியந்துகொண்டாள்.

அன்னையுடன் குப்பைகள் சேரும் இருண்ட சந்துகளிலும் ஈரச்சதுப்புகளிலும் சிகண்டினி தங்கினாள். அங்கே மதம்பரவிய சிறுகண்களுடன் வரும் பன்றிகளுடன் தன்னால் உரையாடமுடிவதை அவள் கண்டுகொண்டாள். அவற்றின் சொற்கள் அவளுக்குப்புரிந்தன. அவள் சொல்லும் சிறு ஒலியையும் அவை அறிந்துகொண்டன. அவள் தன் அன்னையுடன் கிடக்கையில் அப்பால் படுத்திருக்கும் கரியபெரும்பன்றிகளுடன் பேசிக்கொண்டிருப்பாள். பன்றியிடமிருந்து வலிமையே மிகத்தெளிவான மொழி என சிகண்டினி கற்றுக்கொண்டாள். கங்காத்வாரத்தில் அவள் சென்றுகொண்டிருக்கையில் அவள் உடல் தன்மீது பட்டதனால் சினம் கொண்ட ஒரு வீரன் தன் வேலைத்தூக்கியபோது தலையைச் சற்று தாழ்த்தி மெல்லிய உறுமலுடன் அவள் முன்னகர்ந்தபோது அவன் அச்சத்துடன் பின்னகர்ந்தான்.

எந்நிலையிலும் பின்னடையாமலிருப்பதே வலிமை என்று சிகண்டினிக்கு பன்றிகள் சொல்லின. தன்உயிரை அஞ்சாத கண்மூடித்தனமான முன்னோக்கிய வேகத்தைத்தடுக்கும் ஆற்றலென ஏதும் மண்ணில் இல்லை என்று அறிந்து அதுவானாள். சிறிய முனகலுடன் அவள் கடைவீதியில் சென்று நின்றால் அனைவரும் அஞ்சி வழிவிட அவளைச்சுற்றி வெற்றிடம் பிறந்து வந்தது. ஒருகாலை அவள் மெல்லத்தேய்த்து தலையைத் தாழ்த்தினால் எந்த ஆயுதமும் அவளை எதிர்கொள்ளச் சித்தமாகவில்லை.

வராகியின் பெரும்பசி கொண்டிருதாள் சிகண்டினி. முட்டிமுட்டி உழுதுபுரட்டி அழுகலும் குப்பையுமாக அனைத்தையும் அவள் உண்டாள். அவள் கரிய உடல் திரண்டு பருத்தது. முலைகள் முன்னெழுந்து, இடைதிரண்டு விரிந்து, இருளுலகம் விட்டு எழுந்த அரக்கிபோலானாள். அவள் சருமம் இளமையின் ஒளிகொண்டு நனைந்த கரும்பாறை என மின்னியது. அவள் பற்கள் வெண்பளிங்குக் கற்களென மின்னின. அவள் இரு மேலுதட்டு ஓரத்திலும் பன்றியின் தேற்றைகள் என கோரைப்பற்கள் முளைத்தன.

VENMURASU_EPI_35_

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

கங்கைக்கரையில் நடந்து காசி, காசியிலிருந்து மீண்டும் கங்காத்வாரம், அங்கிருந்து மீண்டும் காசி என அன்னை அலைந்துகொண்டிருந்தாள். காசியின் நெரிசல்மிக்க தெருக்களிலும் படித்துறையின் மனிதக் கொப்பளிப்பிலும் அனைவரையும் சிதறடித்தபடி ஓடும் அவளை அடையாளம் வைத்துக்கொண்டு சிகண்டினியும் பின்னால் ஓடினாள். மிரண்ட பசு ஒன்று அன்னையை தன் கனத்த குறுங்கொம்புகளால் குத்தி தூக்கித்தள்ளியபோது உறுமியபடி வந்து அப்பசுவை தலையாலேயே முட்டிச் சரித்து விழச்செய்து துரத்தினாள். பாதையோரம் அன்னையை இழுத்துச்சென்று போட்டு நீரும் உணவும் கொடுத்து அவள் எழுவது வரை அவளருகே துயிலாமல் மூன்றுநாட்கள் அமர்ந்திருந்தாள்.

காசியின் அன்னசாலைகள் சிகண்டினிக்காகத் திறந்துகொண்டன. உணவுக்குவைகளை அவள் திமிர்குலுங்கும் நடையுடன் அணுகியபோது அவள் விரும்புவதையெல்லாம் அள்ளிப்பரப்பிவிட்டு விலகிக்கொண்டனர் சேவகர்கள். அவள் அனைத்தையும் அன்னைமுன் படைத்து உண்டாள். இரவில் கங்கைநீரில் குதித்து அன்னை நீந்தி நீரோட்டத்தில் செல்கையில் எதையும் சிந்திக்காமல் சிகண்டினியும் குதித்தாள். சிந்திக்காததனாலேயே அவளால் நீந்த முடிந்தது. இரவெல்லாம் நீரில் மூழ்கித்துழாவும் அவளருகே மிதந்தபின் அவள் கரையேறியதும் சிகண்டினியும் வந்து சேர்ந்தாள். மணிகர்ணிகா கட்டத்தில் எரியும் சிதைகள் அருகே அன்னை குளிர்காய்ந்தபோது அந்த நெருப்பை அவளும் அறிந்தாள்.

பேரன்னசாலையின் பின்பக்கம் அன்னையும் அவளும் உண்ணும்போது முன்பக்கம் அரண்மனைச் சேவகர்கள் வந்து குறுமுரசறைவித்து அன்றிலிருந்து பதினைந்துநாள் அனைவருக்கும் உணவு அளிக்கப்படும் என அறிவித்தனர். நகரத்தெருக்களில் அலங்கரித்துக்கொண்ட பெண்களும் குடிவெறியில் கண்சிவந்த ஆண்களும் வண்டிகளில் ஏறி குதிரைகளை வேகப்படுத்தி கூச்சலிட்டபடி சென்றனர். படகுகளில் பலவண்ணக் கொடிகளுடன் முழவும் கிணையும் பறையும் முழக்கியபடி நடனமிட்டுச்சென்றனர் கிராமத்தினர். வண்ணச்சுண்ணங்களை உயர்ந்த மாளிகைகள் மீதிருந்து அள்ளி கீழே செல்பவர்கள் மேல் பொழிந்தனர். சிரிக்கும் பற்களின், நடனமிடும் கால்களின், சுழலும் கைகளின், வண்ணங்களின் அலையடிப்பின் பெருநகரம் ஆயிற்று காசி.

நெய்கலந்த இனிப்பும் ஊன்சோறும் மாட்டுவண்டிகளில் மலைமலையாக வந்து இறங்கின. சிகண்டினி எழுந்து சென்று பார்த்துக்கொண்டு நின்றாள். காசிமன்னர் பீமதேவரின் பட்டத்தரசி மறைந்து நீர்க்கடன் நிறைவடைந்துவிட்டதென்றும் அவர் வங்கமன்னனின் இரண்டாவது மகளை மணந்து அவளை அரசியாக்கிக்கொண்டிருக்கிறார் என்றும் பேசிக்கேட்டாள். வங்கன்மகளின் அழகையும் நூறு ரதங்களிலும் நூறு வண்டிகளிலும் அவள் கொண்டு வந்த சீதனத்தையும்பற்றி மக்கள் பேசிக்கொண்டிருந்தனர். அவளை பேரழகி என்றனர். காசிநகரம் வெற்றியுடனும் செல்வத்துடனும் பொருந்தியது என்றனர். எவரோ எங்கோ மறைந்த பட்டத்தரசியைப்பற்றியும் அவள்பெற்ற மூன்று இளவரசிகளைப்பற்றியும் சில சொற்கள் சொன்னார்கள். ஆனால் நகரமே களிவெறிகொண்டிருந்தபோது அதை எவரும் நின்று கேட்கவில்லை.

இனிப்புகளையும் அப்பங்களையும் பெற்றுக்கொண்டு அவள் தன் அன்னையிடம் வந்தாள். அவளிடம் அவற்றைக்கொடுத்தபோது அனைத்தையும் ஒன்றென பெற்றுக்கொள்ளும் நெருப்பைப்போல அவள் அதையும் வாங்கிக்கொண்டாள். இருண்ட வான்வெளியில் இருந்து வந்து ஓர் மனித உடலில் குடிகொண்ட பிடாரி என ஆடிக்கொண்டும் முனகிக்கொண்டும் இருந்தாள். பின்பு இருகைகளையும் தூக்கி அலறியபடி நகரத்துத் தெருக்களில் ஓடி சதுக்கத்தில் நின்று ஓலமிட்டாள். அவள்மேல் செவ்வண்ணப்பொடியைக் கொட்டி உரக்கச்சிரித்தபடி குதிரைகள் இழுத்த ரதங்களில் பாய்ந்து சென்றனர் இளைஞர்கள் சிலர்.

காசியிலிருந்து வழக்கம்போல மீண்டும் கங்காத்வாரம் நோக்கிச் செல்லாமல் கீழ்த்திசை நோக்கி செல்லத்தொடங்கினாள் அன்னை. சிகண்டினி அவளைப் பின் தொடர்ந்துசென்றாள். இம்முறை அன்னையின் வேகமும் கூச்சலும் அதிகரித்திருக்கின்றனவா என்று அவளுக்கு ஐயமாக இருந்தது. ஒவ்வொரு ரதத்தை நோக்கியும் கூச்சலிட்டபடி எம்பிக்குதித்தாள். ஒவ்வொரு படகை நோக்கியும் கரையில் இருந்து எதையோ எடுத்து வீசினாள். புயலில் ஆடும் பாய்மரம் கொடிமரத்திலறைவது போல மார்பில் மாறி மாறி அறைந்துகொண்டாள். ஒருகட்டத்தில் சிகண்டினி ஓடிச்சென்று அவள் கைகளைப் பிடித்துக்கொண்டாள். சிகண்டினி பிடித்திருப்பதை அறியாமல் அவள் கைகள் மார்பை அறைந்தன. பித்து மட்டுமே உருவாக்கும் பெருவல்லமையை அக்கைகளில் சிகண்டினி கண்டாள்.

அஸ்தினபுரிக்குச் செல்லும் பெருவாயில்முகம் கங்கைக்கு அப்பால் தெரிந்தது. அன்னை ஒருபோதும் கங்கையைக் கடப்பதில்லை என சிகண்டினி அறிவாள். ஆனால் அன்று அவள் நீரில் குதித்து நீந்தத் தொடங்கினாள். சிகண்டினியும் பின் தொடர்ந்தாள். நாவாய்கள் நகர்ந்த பெருநீர்ப்பரப்பில் வடக்கு வானில் இருந்து தெற்குநோக்கி களைத்த சிறகுகளுடன் தனித்துச்செல்லும் கடைசி வலசைப்பறவைகள் போல அவர்கள் இருவரும் நீந்திக்கொண்டே இருந்தனர். மறுபக்கம் குறுங்காட்டில் ஏறி ஈரம் சொட்ட, அவளை திரும்பிக்கூட பாராமல் அன்னை துறை நோக்கிச் சென்றாள்.

செங்கல்லால் கட்டப்பட்டு வண்ணச்சுதையால் அழகூட்டப்பட்ட விதானவளைவுக்கு மேல் அமுதகலசச்சின்னம் பொறிக்கப்பட்டு அஸ்தினபுரியின் கொடி பறந்துகொண்டிருந்தது. ரதசாலையில் வரிசையாக அவிழ்த்துப்போடப்பட்ட ரதங்கள் காத்திருக்க அப்பால் குதிரைகள் ஆலமரத்துவேர்களில் கட்டப்பட்டு வாயில் கட்டப்பட்ட கூடைகளில் இருந்து கொள் மென்றுகொண்டிருந்தன. செம்மண்சாலை எழுந்து காட்டுக்குள் வளைந்து சென்றது. அதன் வழியாக புழுதிச்சிகை பறக்க ரதங்கள் வந்து நிற்க அவற்றில் இருந்து வணிகர்களும் மறவர்களும் இறங்கி படித்துறைக்கு வந்தனர். அவர்களின் மூட்டைகளைச் சுமந்து படித்துறைக்குக் கொண்டுவந்த ஏவலர்கள் அங்கே கங்கைக்குள் கால்பரப்பி நின்றிருந்த மரத்துறைமீது அவற்றை அடுக்கினர். துறைமேடையை முத்தமிட்டும் விலகியும் கொஞ்சிக்கொண்டிருந்த படகுகளில் ஏவலர் பொதிகளை ஏற்றும் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.

கரையிலிருந்து நீரில் இறங்கிய ஆலமரத்துப் பெருவேர்களில் கட்டப்பட்ட சிறியபடகுகள் முலைகுடிக்கும் பன்றிக்குட்டிகள்போல துறையை ஒன்றையொன்று முந்தி முட்டிக்கொண்டிருந்தன. வந்தமரும் நாரைகள் சிறகுமடக்குவதுபோல பாய்சுருக்கியபடி பெரும்படகுகள் கரையை அணைந்தபோது அப்பால் முரசுமேடைகளில் இருந்தவர்கள் ஒலியெழுப்பினர். கரைகளில் இருந்து ஏவலர் துறைமேடை நோக்கிச் சென்றனர். அன்னை முன்னால் செல்ல மனமே கண்ணாக மாறி சிகண்டினி பின் தொடர்ந்தாள்.

துறைமேடைக்கு மிகவும் தள்ளி ஆலமரத்துவேரில் கட்டப்பட்ட தனிப்படகு ஒன்று நீரால் கரைநோக்கி ஒதுக்கப்பட்டு நின்றிருந்தது. மேலே எழுந்த ஆலமரக்கிளைகளின் சருகுகளும் பழுத்த இலைகளும் உதிர்ந்து பரவி மட்கி அதன் மூங்கில்வளைவுக்கூரை மூடப்பட்டிருந்தது. அதன் தீபமுகத்திலும் சிறுமுற்றத்திலும் எல்லாம் சருகுகள் மட்கியிருக்க அணில்கள் மரம் வழியாக கூரைமேல் தாவி கீழே தொற்றி இறங்கி அச்சருகுப்படலம் மேல் ஓடிவிளையாடின. அப்படகில் நீண்ட தாடியும் பித்து ஒளிரும் கண்களுமாக தோணிக்காரன் அமர்ந்திருந்தான்.

நிருதன் என்னும் அந்தத் தோணிக்காரன் என்றோ ஒருநாள் அங்கே வந்தபின் அந்தத் தோணியிலேயே அமர்ந்துவிட்டான் என்றனர் துறையில் வசித்தவர்கள். அவன் யார் எவன் என்ற எவ்வினாவுக்கும் பதில் சொல்லவில்லை. தோணியின் தீபமுகத்தில் கையில் துடுப்புடன் அமர்ந்தபடி செந்நிறச்சால்வைபோலக்கிடந்த அந்தப்பாதையையே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் எவருக்காகவோ காத்திருப்பதாக நினைத்தனர். நாட்கள் செல்லச்செல்ல அவன் சித்தம் கலைந்துவிட்டது என்றறிந்தனர். சுங்கமேலாளனாகிய சக்ரதரன் அவனுக்கு ஒவ்வொருநாளும் அப்பமும் நீரும் கொண்டுசென்று கொடுத்தான்.

கையில் வருவதை உண்டு கங்கை நீரைக்குடித்து அங்கேயே அவன் இருந்தான். இரவும் பகலும் அந்தச்சாலையை அவன் கண்கள் விழித்து நோக்கிக்கொண்டிருந்தன. உடல் மெலிந்து பாம்புத்தோல் கொண்டு சடைவிழுந்து கண்கள் குகையாகி பேயுருக்கொண்டான். இரவுகளில் தன் சாளரத்தினூடாக அவனைப்பார்த்த சக்ரதரன் இருளில் மின்னும் அவ்விரு விழிகளைக் கண்டு சித்தழிந்து நோக்கிக்கொண்டிருந்தான். முதல்நாள் முதற்கணம் அவன் அக்கண்களில் கண்டு திகைத்த அந்த எதிர்பார்ப்பு கற்சிலையில் செதுக்கப்பட்டதுபோல அப்ப‌டியே இருந்தது.

அன்னை அஸ்தினபுரிக்குச் செல்லும் செம்மண்பாதையை அடைந்து அத்திசை நோக்கி சிலகணங்கள் நின்றபின் திரும்பிநடந்தபோது சிகண்டினி பின்னால் சென்றாள். நெடுந்தொலைவிலேயே அன்னையைக்கண்டு நிருதன் எழுந்து நின்றான். கைகளைக்கூப்பியபடி படகிலிருந்து முதல்முறையாக இறங்கி நிலத்திற்கு வந்து முன்னால் நடந்து வந்தான். அவன் நடப்பதைக்கண்டு பின்னால் துறையிலிருந்த சேவகர்களும் அதிகாரிகளும் பெருவியப்புடன் கூடினர். சிகண்டினி முதல்முறையாக அன்னை ஒரு மனிதனை அடையாளம் கண்டுகொள்வதைக் கண்டாள்.

தன் முன் வந்து நின்ற அன்னையின் முன்னால் மண்ணில் அமர்ந்து அவள் பாதங்களை வணங்கினான் நிருதன். அவள் அவன் முன்னால் ஓங்கி நின்றிருந்தாள். பின்பு மெல்லக்குனிந்து அவன் தலையை தன் கைகளால் தொட்டாள். அவன் உடல் குறுகியது. சிலகணங்களுக்குப்பின் அன்னை ஓலமிட்டபடி புதர்காட்டுக்குள் நடந்தாள். சிகண்டினி அவள் பின்னால் ஓடும்போது தன்பின்னால் நிருதனும் வருவதைக் கண்டாள்.